என் காவியக் காதலன் கண்ணன் 1
6.3.07
லட்சுமி எழுப்பும்
வீணை இசையின்
துளியில், ஒரு அணுவாக
வியாபித்திருக்கும்
நித்தியானந்தன் அவன்!.
உலகோர் செவிகளில்
உள்ளிருக்கும் படலங்களில்
அமர்ந்துகொண்டு
உள் நுழையும் பாடல்களைத்
தணிக்கை செய்யும்
பரம சுந்திரன் அவன்!
ஒளியை மிஞ்சும் வேகத்தில்
கண்களைச் சிமிட்டியும்
இமை முடிகளுக்கு இடைப்பட்ட
இடைவெளியில் நிலைகுலையாமல்
நிற்கும் சுந்திர ரூபன் அவன்!
இறந்துபோன பிக்காசோவை
ஐன்ஸ்டீன் விதிப்படி அழைத்து
சித்திரமாய் தன்னை
வரையச் சொன்ன
நித்தியத் திருமகன் அவன்!
அன்னையின் தாலாட்டில்
ஒவ்வொரு எழுத்துமாய்
நிறைந்து கொண்டு
குழந்தையின் செவிக்குள்
ஊற்றெடுக்கும் நாதசுவரம் அவன்!.
கொக்கரிக்கும் கூட்டத்திற்கு
வெறும் சக்கரத்தைக் காட்டி
குற்றேவல் புரியவைத்து
அவர்களை வெள்ளையாக்கியே
நீலமாய் போனவன் அவன்!
அமரகற்பகம் எனும் ஊருக்குள்
ஆளை அடக்கும் இந்திரனும்
நிந்தனையே என்று நினையாத
நான்முக பிரம்மனும்
நிதமும் தரிக்கும்
திருநாமச் சந்தனம் அவன்!
இத்தனைக்கும் சொந்தக் காரன்
திருநீல வர்ணக்காரன்
சித்திபெற்ற யுத்திக்காரன்
யசோதையின் மைந்தன்
என் கண்களின் துடிப்புகளுக்கு
அடிமையாவது ஏன்?
கொய்தது பிச்சி @ 8:10 PM,