பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 2

சொரிந்து கிடக்கின்றன
வெந்தழலில் கருகப்போகும் பூக்கள்
முழித்துப் பார்த்து சிரிக்கிறதே
தேனுக்குச் சுற்றும் வண்டுகள்

இதே தெருவில்தான்
ரதிமன்மத ஊர்வலம்
கண்டதுகள் இந்த சக்கைகள்.
நர்த்தனம் போட்டு
வரவேற்றதுவும் இவைகளே!!

நெளிந்து வளைந்தாடும்
இலைகளின் நுனியில்
சொட்டாக அமர்ந்து
கனம் ஏற்றும்
தீப்பந்த்ததின் துளிகள்
இவ்விரண்டு உதிர்தலை
கவனிக்காமல் போய்விடுகின்றன
அல்லது தடுப்பணை போடுகின்றன.
வெந்தழல் மெருகினில் பூக்கள்
செம்மையாகத் தெரியலாம்
மாயம் அது.

மீதியின்றி கருகிப் போகும்
பூக்களின் வாசனை நுகருவது
வண்டுகளின் நோக்கமென்றால்
தீந்துளிகளின் தடுப்பணை
தோற்று விடுகிறதே!
இறைவா! விட்டுவிடு
இனி மென்மையாகப் படைப்பதை.

கொய்தது பிச்சி @ 1:53 PM, ,




குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள்

குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள்
என்னை ஒருவன் காதலித்தான்... வேதனை செய்தான்... என் மனம் அறியாமல் தோற்றோடிவிட்டான்... அவனைப் பற்றி...............

வீதியில் நின்று சிரித்தோடிவிடுகிறது
இளமை பொங்கும்
இன்ப நிலா!

கண்டாவது களித்திடுவோமென
கங்கணம் கட்டியே
காத்துக் கிடக்கிறது
ஒரு கவியின் கரு.

அயர்ந்து போன வானத்தில்
கோபக் கூட்டமாய்
பால்வழியில் கூடுகின்றன
பூமியில் காதல் மறுப்பை
மறுத்து ஏங்கும்
கவிஞர்கள் கவிதைகள்

நிலவை நிந்தித்தே
நித்தம் கூடிடுவார்கள்
தீட்சணம் இல்லாமல்
தீண்டிடுவார்கள்
அனலின் அனுபவத்தை
எப்போதும் தாங்கியே போன
நிலவின் மையத்தில்
பனிகளை உருக்கி ஊற்றுவார்கள்
கவிஞனின் அநுமானத்தில்
ஏதாவது மிச்சமிருக்கலாம்
ஆம்! நிலவுக்கும் நிழழுண்டு
நிழற்சரிவு ஏற்படுத்த முடியுமா
சூரியனின் காதலியை ஏய்க்கும்
சூரிய பருக்கள்?
நெஞ்சு பிளந்தாலும்
நெருங்க முடியாத ஒரு
நட்சத்திரத்தின் அனல் மட்டும்
எப்போதும் வீசிக்கொண்டேதான் இருக்கும்...


கொய்தது பிச்சி @ 3:24 PM, ,




என் பிரிவு (இலையுதிர்வு)

உனக்கும் எனக்குமான
ஓர் பந்தம்;
நிரந்தரமற்றது.
யாவரின் பிறப்பைப் போல்
கொப்பூள் கொடியோடு
பிறக்கிறேன்.
என் பிறப்பிலிருந்து
இறப்புவரை
அது நீங்குவதில்லை
என்னை விட்டு.
என் நரம்புகள்
ரேகையாக எங்கும் படர
தேகமெல்லாம் ஓவியங்கள்;
செயற்கைக் காகிதங்களை விட
வலிமையான இழைகளான
பெட்டகங்களே என் குறிப்புகள்;
வர்ணத்திலும், வாழ்க்கையிலும்
இயற்கையாகவே
இருந்துவிட்டேன்.
நான் இறப்பதற்கு சற்று
முந்தய நாளில்
என் கொப்பூள் கொடி அறுப்பாய்!
நான் வீழ்ந்திடுவேன் கோபமாய்!
மெல்ல மெல்ல
மெளனராகமாய்
அங்குமிங்கும் அலைந்து
என் கீதங்கள் யாரின்
செவிக்கும் எட்டாதவாறு
மண்ணில் கலந்திடுவேன்..
இறந்துபோகும் யாருக்கும்
மண்ணே வீடு.
உன்னைவிட்டு விழுந்த போதும்
நீயே எனக்கு சுவர்க்கம்.
என் உதிர்வுகள்
ஒவ்வொருநாளும் நடக்கின்றன.
ஒரு சாதாரண மழையைப்போல....


கொய்தது பிச்சி @ 2:38 PM, ,




அரவாணிகளை ஒதுக்கினோமே!!

வீணைக் கம்பிகளின்
ஒலிவழியே சென்று
இசையாகி மலர்ந்த
ஓர் ராகத்தை
சீ! வேண்டாமென
சொல்லி ஒதுக்கினோம்

மண் வழியே ஊர்ந்து
விதையாகி, இலையாகி,
மரமாகி கனியாவதற்குள்
சீ! இந்த பழம் புளிக்கும்
என வீசி எறிந்தோம்

நத்தையை அழகென்று
எண்ணி கைகளில் சேர்த்து
ஊரும் வலியை மனதில்
வேறு விதமாய் நினைத்து
சீ! என்று வீசியெறிந்தோம்

பூவழகு, புனையழகு
என்று பூவைச் சுவைத்து
பல கவிதை சொல்லி
கனியழகு கனிச் சுவையழகு
என்று கொறித்து மகிழ்ந்தோம்
சீ! என்று ஒதுக்கி விட்டோம்
பூவுக்கும் கனிக்கும்
இடைப்பட்ட காயை!

வேல்விழியும் மான் தலையும்
பால் முகமும் பருத்தித் தோலும்
நால் குணமும் நல்லுயர்வும்
பெற்ற ஒருவரை
வணங்குகின்றோம்
சீ! என்று பார்க்காது போகிறோம்
மேற்சொன்ன
குணம் இருந்தும் இருக்காதவரை!

சில நேரங்களில்
அமீபாவாய் உருமாரும்
மனிதர்களின் ரூபமற்ற
அகத்தினை
சீ! என்று என்றாவது
சொல்கிறோமா?

கொய்தது பிச்சி @ 9:43 PM, ,




சோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள்

ன்றும்
என்னிதயம் மகிழும்
உன் (காதலன்) சொற்கள்
இன்று
மெல்ல மெல்ல
அவிழ்கிறதே
இதயத்தின் மேலாடை.

தனிமரமாய்
தவித்து தவித்து
ஏங்கிய என்னை அள்ளிப்
பருகினாய் உள்ளத்தில்.
அள்ளியபின்
எள்ளிச் சிரிக்கிறாய்

என்னிடம் தீர்த்தம் தீர்ந்துவிட்டதா?
அமிழ்தம் அமிழ்துவிட்டதா?
அள்ளியபோது நிறைகண்டாய்
இன்று குறையே காணுகிறாயே!

வெட்கம் இன்று எனக்கு.
நீர் கோர்த்த வெட்கம்!
உன்னிடம்தான்
வெட்கத்தின் இருவகை கண்டேன்.

சிரிக்கும்போது
வெட்கும் கூடவே இருப்பாய்
அழும்போது நீ சிரிக்கிறாய்
என் துளிகள் எனக்கு ரத்தம்
உனக்கு தூசி..

பேனாக்கள் இன்று
கடைகின்றன
என் விழித்துளிகளை வைத்து
ஒரு சோகக் கவி.

அவையும் அழுகின்றன மையோடு
எனக்குமட்டும் தெரியும் வகையில்
உனக்குத் தெரிந்து நான் ஒரு பூக்கும் மரமா?
இல்லை பட்ட கரமா?
அழுகிறேன்; அழுகிறேன்;
அழுவதற்கு இனி
நீரின்றி உலர்ந்து போகிறது.
உன்னையே இன்றும் நினைக்கும்
என் விழிகள்

கொய்தது பிச்சி @ 3:48 PM, ,




சோக கீதம் என் அக்காவோடு

வெளூத்த பொழுதைக்
கழிக்க, குருவிக்
குஞ்சுகளுக்கும்
கனவுண்டு.
காதல் ஓலம் படைக்க
இலங்கைப் பெண்ணுக்கும்                   (என் தோழி; அக்கா!)
நனவுண்டு

அண்ணாந்து பார்த்த
அந்த ஒரு நிமிடம்
ஆர்ப்பரிக்கும்
அலைகடலுக்கும்
ஒப்பாகாத பார்வை;
காதலிக்கும் வண்டின்
ரீங்கார சப்தத்திற்கும்
மாட்டாத ஓலக்குரல்;
விழித்து விழித்து
விழிகளில் கோலமிடும்
காந்தக் கண்கள்
இவை யாவற்றிற்கும்
தகுந்த உனது அம்மா!

சொல்லவே துடிக்கும்
எனது கவிதையின்
எழுத்துகளுக்கு நிகரில்லை

தெவிட்டாத கூக்குரல்
தெளித்த இடமெங்கும்
எதிரொலிக்கும் கடலுக்கும்
எதிரான சக்தி கொண்டு
கேட்கிறது.
இயற்கையாய்
இறக்கை
இறந்துவிட்ட எனக்கு
இறவாத பறவை நீ!

சோகத்தில் கீதம் பாடும்
கவிதை படைக்கத் தெரியும்
இலங்கைப் பெண்ணுக்கு..
ஆனால்
எனக்கு அது தெரியாது.

ஆதலால்
பாடு குயிலே; சோக கீதம்
இந்தப் பெண்ணோடு!
ராகமும், தாளமும் மாற்றி,
சோகமும், காதலும் ஏற்றி,
குயிலுக்கே உரிய பண்ணோடு.
பாடு நீ!
அந்த சூரியன் அழியும் வரை
வானம் சிவக்கும் வரை
அலைகள் ஓய்வெடுக்கும் வரை
நானும் சாயும் வரை.
பாடு கீதம்
இலங்கைப் பெண்ணோடு!!

கொய்தது பிச்சி @ 3:19 PM, ,




மணம் தேடிக் காத்திருக்கும் மங்கை

சைந்திடும் பாடலுக்கு ஏற்ப
வளைந்து நடனமிடும்
பூமித்தாயின் ஓர் மடியில்......
தொட்டு மலரும் பூக்களுண்டு
தொட்டு வெட்கும் இலைகளுண்டு
நான் எந்த வகை?
மெல்லத் திறவும் பூவாக
அதிரங்கள் திறந்து
உதிரும் வார்த்தைகளைப்
பொருக்க வேண்டும்
கவிதைக்காவே!

மெல்லிய கனவுகளோடு
பூப்பெய்திய நாள் முதல்
பூவுக்குள் வெடிச்சத்தம்
நாளூம்
கண்களின் துளிகள்
வருத்தமல்ல; ஆயினும்
பெண்கள் நாங்கள்
துயில் கொள்ள வேண்டுமே
காதலனின் மடி!

தெள்ளிய நீருக்குள்
முகம் பார்க்கலாம்
அகம் பார்க்க முடியுமா?
உரலுக்குள் அரைத்த மாவினில்
அரைந்துபோன கண்ணீர்த் துளிகள்
உரசலாலும் விரசலாலும்
நெருப்பாய் மாறிவிடும்.

நெருப்பு அழிவு;
வன்மை, கொடூரம்;
தீபம் அதுவல்ல.

தீபம் வேண்டிக் கேட்கிறேன்
என்றும் தீராத திரவத்துடன்.

கொய்தது பிச்சி @ 6:47 PM, ,




நித்திய சூரியன்

ரவுப் பூச்சிகளின்
முதுகில் வெங்கதிர் பாய்ச்சி
கனவைக் கலைத்து
அதன் ஒளியைக் கெடுத்து
ஒளியைக் கொடுக்கும்
வெண்மை மைந்தன்.

மகரந்த விதைகளின்
வீழ்ச்சியினால், சோகமாய்
கண்ணீர் வடிக்கும் பூக்களுக்கு
மெல்ல ஆறுதல் சொல்ல
அள்ளி வரும்
பூக்களின் தலைவன்.

இலைகளின் காதலி
நுனியிதழ் தேவதைக்கு
மறுஜென்மம் நீட்டித்து
தெய்வமாகும்
புற்களின் புதல்வன்.

பூச்சிகளின் பேச்சுவார்த்தைகளை
தினமும் கலைத்து விட்டு
யோஜனை ஏதுமின்றி
குழப்பங்களுக்கு மத்தியில்
அமர்ந்து சிரிக்கும்
சிந்தனைச் செம்மல்.

பின்னிப் பிணைந்திருக்கும்
இரவுப் பிள்ளையின்
நாபிக் கமலத்தை
நிதம் நிதம் அறுத்து
இரவுக்குள் மீண்டும் பிள்ளையாக்கும்
நிலவின் கணவன்.

தனித்தே இருக்கும்
தண்சுடர் காதலியின்
உயிர் கெடுத்து, சிதைத்து,
உயிர்கொடுத்து வாழும்
உன்னதமான நண்பன்.

ஆழ்ந்துறங்கும் மான்களின்
கொம்பு வழி சக்தி புகுத்தி
வம்பு வளர்க்கும்
விலங்கின வீரியன்.

மெய்ஞானத்தின் ஓர் புறத்தில்
மெய்யாகவே அமர்ந்து
பொய்யான வாழ்வுக் கடலில்
மூழ்கி மீன் பிடிக்கும்
மீனவக் குமரன்.

செதில்களின் அசைவுகளில்
தாளம் இசைத்து
கண்களின் வளைவுகளில்
பாடல் பாடும் மீன்களை
மேடை ஏற்றும்
விண்மீன் காந்தன்.

மெல்ல எழும் போது
தன் துணைவியின் நிறம் கலைத்து
நித்திய தரிசனத்தின்
மத்தியில் வந்து வணங்கும்
சத்திய சூரியன்.

இவை எதுவும் பொருட்படுத்தாது
பிளாஸ்டிக் கனவுகளில்
வாழ்க்கை நடத்தும்
செயற்கை மனிதம்.

கொய்தது பிச்சி @ 9:24 AM, ,




கவிதைக்கு ஒரு கவிதை

நீ
யோகங்களின் பிறப்பிடம்.
உன்மதமான உறைவிடம்.
தியாக வளைவுகளில்
நர்த்தனமாடும் தெய்வீகம்.
வாழ்வுச் செறிவில்
ஓசையின்றி கூக்குரலிடும்
தாய்மையின் தாலாட்டு.

நீ
குறுத்துக்களில் மத்தியில்
திரவமில்லாமல் ஒளிந்திருக்கும்
சம்பத்து.
சுனைநீர் மேலிட
அங்கங்களில் கவிதை பாடும்
மகா கவி.
தாவரம் மேல் மிதக்கும்
ஆவி போன்ற வெண்மை
பனித்துளி.
பெளதிக வாழ்வில்
ஆன்மிகச் செறிவு
உட்கொள்ளும் ஆசிரியன்..

நீ
தாளங்களை ஏற்றிச் செல்லும்
ராகங்களின் உதயம்.
வேதப் பித்துக்களில்
யாதொரு பயமறியாது
கோள் சொல்லும் பிள்ளை.
விரல் நுனிவினில்
தேகம் வைத்து
நான் யாரெனச் சொன்னவன்.

நீ
கற்பு நெறி விளங்கும்
என் மனதில், ஆணின்றி
விதைத்திட்ட விதை.
என் விழிகளின் வழி
துளைத்து உன் ரசங்களை
ஊற்றிவிட்ட தென்றல்.
பிரபஞ்ச விருத்திக்கு என
பூமியுடன் கூடல் செய்த
தூயவன்.

நீ
என் காதல்
என் கவிதை.
என் தேகம்; தமிழ் தாகம்
என்னோடு யாதுமாகி.
நீயின்றி ஒரு அணுவும் உளதோ?

கொய்தது பிச்சி @ 2:53 PM, ,




என் கனவு

தூங்கிய பின்னும் முகங்கொடுத்து
தூங்கிய என்னை உன்
மடி அமர்த்தினாய்
பஞ்சு மெத்தையிலே
நான் படுத்ததில்லை
படுத்திய பின்னும் இன்னும்
ஏனடா தயக்கம்?
முத்தமிடு என்னில்.
இந்த இரவு சுகப்படட்டும்
சோகம் கூட தாலாட்டாய்
எவ்வாறு படிப்பாய்?
உதிரும் பூக்கள் போல் வார்த்தைகளை
கொட்டும் உன் நாவிதழில்
தேன் இருக்குமோ?
உருவமில்லா உன்னை
நினைக்கவே என்னுருவம்
தொலைந்து போனது
என்னை நாளும் தொந்தரவு
செய்வதை நிறுத்து

கேள்விக்கு பதிலாக,
உன் முத்தத்திற்கு என்னால்
முத்தமிட முடியாது
சத்தமில்லாத உலகைப்
படைத்த நீ
என்னைப் போல் எத்தனை
பேரை மயக்க வைத்தாய்!

போர்த்திய போர்வையிலே
நான் அறியாமல்
என்னுள் நுழைந்து
என்னை வாட்டுகிறாய்
இனியும் உன்னுடன் பேசாதிருப்பது
சரியல்ல தானே!

கண்களால் பேசிக்கொள்ள
நம் கண்களும் இல்லை;
உதடுகளால் பேசிக்கொள்ள
என்னுதடும் இல்லை
நினைவுகளாலே பேசுவோம்!!
பொழுது விடியும்வரை
கண்ணுக்கு புலப்படாத நீ
சொல்லாமலே சென்று விடுகிறாய்!
என் நினைவுகளையும்
கலைத்து விடுகிறாய்

கால்களால் இணைத்து
என் கைகளை அணைக்கிறாய்
மூடாத விழிகளில் காண முயலுகிறேன்
இனியும் சொல்வதெற்கென்ன
முடிந்து போகாத என் வாழ்வின்
இளமைக் காதலனே!
உன்னை விட எனக்கு ஆசை
வளர்த்தவர் எவருமில்லை

எழுத முடியாத கவிதையாய்
நாள்தோரும் வாட்டும் உன்
வார்த்தைகள் காற்றோடு
கலைந்து போவது பாவமடா!
நேற்றுவரை நடந்தது
நடந்தபடிதான்!
இன்று நடனமாடு என் முன்
இதோ! என் இதயம்
சபையமைத்துத் தருகிறது
எப்பொழுது வரும் இரவென
பகல் முழுவது நினைத்திருப்பேன்
அட! அதிலும் நீ
முழுவதுமாய் உன்னை
எனக்களித்தா யானால்
எனக்கெதற்கு விழிகளும்
என் இதயமும்.?

கொய்தது பிச்சி @ 2:52 PM, ,




என் கருவுக்குள் நீ!!

ல்லூரி வளாகங்களில்
என்னையே சுற்றி வருகிறாய்
கோயில் சிலைகள் தோற்க.
கண்களினால் உன்னைக் கடைந்திடுவேன்
காதல் மட்டும் வாராது அப்போது.

தேக உரசலுக்கு உன் கண்கள்
தேடாது; மாறாக
சாகும் வரை காதலிப்பாய்
அன்றியும் உதறுவேன்
என் கைகுட்டையை.

(எனக்கு) துளி ரத்தம் சிதறினால்
உனக்கு வினாடிகளில் மறுஜென்மம்
கண்ணீர் உடைந்தால்
ஒட்ட முடியாத உன் இதயம்
பாதம் சறுக்கினால்,
போய்விடுகிறது

என்னைக் காப்பதாகச் சொன்ன
உன் கண்கள்.
ஓவியங்களை என் நெற்றியில் கண்டால்
கோவிலுக்குச் சென்று வேண்டுகிறாய்
இருந்தும் மெளனம் காக்கிறது
என்னுடைய கனமான இதயம்.

தும்மலோ, விக்கலோ, இருமலோ,
எனக்கு வருவதில்லை அவ்வளவு.
வந்தால் அலைகிறாய், நெளிகிறாய்
சற்றும் பிழைத்தும் போகிறாய்
என்மேல்தான் உனக்கு காதல் எவ்வளவு!!

ஆர்குட்டிலே நீ வீரியன்;
தமிழ் மன்றத்திலே நீ சூரியன்
இன்னபிற கவிதை சோலைகளுக்கு
நீயே எல்லாம்.
காரணம் நானென்றா சொல்கிறாய்?
நெருப்பு கொள்கிறது என் கண்கள்.

ஏதாவதொரு சமயத்தில்
உணவு இடைவேளைகளில்
தவறிவிழும் பருக்கைகளை
தேடிப் பிடிக்கிறாய்.
என் நா பட்ட பருக்கைகள்
உனக்கென்ன முத்துக்களா?
என் கொலுசுகள் ஏசுகின்றன உன்னை.

கல்லூரி மணியடிக்கும் போதெல்லாம்
உன் முகத்தில் கண்ணீர் செத்துப் போகிறது.
காலை கல்லூரி வந்து
என் முகம் பார்த்து பிழைக்கிறது
பரிதாபம் கொள்கிறேன் முதல்முறையாய்!

தயங்கி தயங்கி
என்னோடு வரும் தோழியை
நோண்டி
என்னோடு பேச நினைக்கிறாய்
பேச்சுக்கள் உடைந்து போகிறது
மூச்சும் கலைந்து போகிறது உனக்கு
என் சிரிப்பலைகளால் நீ சிலையாகிறாய்.

என்றாவது நான் பேச்சு கொடுத்தால்
இதயத்தை கையில் எடுத்துக் கொண்டு
சென்று விடுகிறாய்
பேசியபின் சொல்கிறாய்
'இதயத்தைக் காணவில்லை'
மெல்ல மெல்ல புரிகிறேன் உன் காதலை

இத்தனை காதல் வைத்தென்னை,
என் இதயத்தை
பிடுங்கியெடுக்கிறாய்
உன் நெஞ்சினில் என் இதயத்தைப் அமர்த்தி
கெஞ்சுகிறாய்,
என் நினைவுகளினாலேயே
உன் நினைவுகளை உருக்குகிறாய்
உன் காதலால் உன் இதயம்
என் கருவினில் வந்தமர்கிறது
என் காதலனே!!!

கொய்தது பிச்சி @ 2:44 PM, ,




அழகான பெண்கள்

ஆயிரம் முறை பார்த்திருப்பாய்
என்னோடு வரும் என் தோழியை,
ஒரு முறை பார்த்திருக்கலாம் என்னை,
என் அழகில்லாத முகத்தை.

உன் விழிப் பார்வைகள் நோக்கும்
தேன் குழைந்த என் தோழியை,
ஒரு முறையாவது பார்த்திருப்பாயா
நான் தொலைத்த என் மனதை..

நீ பார்க்காமலே பேசாமலே
கொல்கிறாய், வதைக்கிறாய் என்னை.
நான் பார்த்து பார்த்தே
மெல்லுகிறேன் சிதைக்கிறேன் உன்னை.

அழகற்றதால் தான் என்-
முகம் மட்டும் தெரியவில்லையோ உனக்கு?
அகல விரித்துப் பார் என்னை.
என்னுள் அறுவடையாகும் காதலை.

என் இதயத்தின் ஆடை உனக்கென்றேன்
விழிகளின் ஈரம் உனக்கென்றேன்
அழகற்ற நானும் பெண்தான்
கவிதைக்காக மட்டுமல்ல இது...

கொய்தது பிச்சி @ 12:55 PM, ,